சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், செம்மணி போராட்டம் வலுப்பெற அதற்கு ஆதரவு வழங்குவதாக, தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் இன்பம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், குறித்த போராட்டம் கிட்டு பூங்காவிலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்து செம்மணியின் பிரதான கூட்டத்துடன் நிறைவு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையீனங்களும், குளறுபடிகளுமே எந்தவொரு போராட்டமும் முழுமையான இலக்கை அடையாது இருப்பதற்கு காரணமாக எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி, ஒற்றுமையின் பலத்தை ஒரு நிலையில் கொண்டுசேர்க்க இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னரே எமது அமைப்பு ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, இந்த போராட்டத்தை பொது அமைப்புகளும், மக்களும் இணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும் கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் இன்பம் தெரிவித்துள்ளார்.

Leave feedback about this