தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கப்பட்டு, சுற்றுலா சென்றது தொடர்பாக சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நகர சபை போன்ற ஒரு அரச நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு விடுமுறை வழங்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டபோது, குறித்த விபத்தில் உயிரிழந்த நகர சபையின் செயலாளர் பி.டபிள்யூ.கே. ரூபசேனவே இந்த விடுமுறைக்கு அனுமதி வழங்கிய அதிகாரி என தெரியவந்துள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.இ.என்.இ. அபயரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
தங்காலை நகர சபை ஊழியர்கள் குழுவின் இடமாற்றம் தொடர்பாக இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், உடனடியாக அத்தகைய விடுமுறை எடுப்பது சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து எதிர்பாராத விதமாக இடம்பெற்ற பின்னரே குறித்த விடயம் தெரியவந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார். அத்துடன் எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து பெறப்பட்ட 10 இலட்சம் ரூபாவுக்கு மேலதிகமாக, போக்குவரத்து அமைச்சு மேலும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தங்காலை நகர சபையின் அங்கீகரிக்கப்பட்ட 47 ஊழியர்களில் 22 பேர் எல்ல – வெல்லவாய சுற்றுலாவில் பங்கேற்றுள்ளதாகவும், மற்றொரு குழு சுற்றுலாவில் பங்கேற்கவில்லை என்றும் நகர சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தங்காலை நகர சபையின் தலைவர் பி.பி.ஜி. நந்தசிறி, இத்தகைய எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம் விபத்தில் உயிரிழந்த நகர சபையின் செயலாளருக்கு காணப்பட்டதாக கூறினார்.
இந்தநிலையில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக உள்ளதாக தங்காலை மாநகர சபையின் தலைவர் கூறுகிறார். இந்த இழப்பீட்டை வழங்குவது குறித்து நகர சபைக்கும் தங்காலை வணிக சமூகத்திற்கும் இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave feedback about this