நாரஹேன்பிட்டி பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த வாகனத்தின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் துசித ஹல்லோலுவவுடன் காரில் சாரதியும் சட்டத்தரணியும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு துசித ஹல்லோலுவவுக்குச் சொந்தமான கோப்பை யாரோ திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
அதேநேரம் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துசித ஹல்லோலுவ மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Leave feedback about this