ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மில்லகஹமுல்ல பகுதியில் உந்துருளியில் சென்ற இருவர் மீது பாரவூர்தி மோதியதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 05.30 மணியளவில், கினிகத்தேன காவல் பிரிவின் மில்லகஹமுல்ல பகுதியில், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற உந்துருளி அதே திசையில் பயணித்த பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட நிலையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உந்துருளியின் பின் இருக்கையிலிருந்த பெண் பாரவூர்தியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் வீழ்ந்து நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு மருதானையை சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் காமடைந்த மற்றுமொருவர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave feedback about this