எல்ல – வெல்லவாய வீதியின் 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக பதுளை மருத்துவமனையின் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கைகால்களை இழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 8 பேர் சிறுவர்கள் என்றும் அவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.00 மணி வரை காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் தேடும் பணிகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடிபாடுகளுக்கு இடையில் மேலும் உடல்கள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் மருத்துவர் கூறினார்.
விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகவும் அதிகரித்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை இன்னும் சரியாகச் சொல்ல முடியாது எனவும் பிற்பகலுக்குள் சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படும் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 9 மணியளவில், வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவில் 23வது மற்றும் 24வது கிலோமீட்டர் தூண்களுக்கு இடையிலான வீதியில் எதிரே வந்த ஜீப் மற்றும் பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி 1000 அடி பள்ளத்தில் விழுந்தது.
விபத்தில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநருடன் 30 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட 06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்த ஆண்கள், 06 பெண்கள், 05 ஆண்கள், 03 சிறுவர்கள் மற்றும் 02 சிறுமிகள் சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பேருந்து பயணிகளை மீட்க உதவிய இருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்கள் தங்காலை பகுதியில் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சடலங்கள் தியத்தலாவை, பதுளை மற்றும் பண்டாரவளை மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துடன் தொடர்புடைய ஜீப்பின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
