Radio Raaga Local News கெரண்டி எல்ல பேருந்து விபத்துக்கான சந்தேகத்திற்கிடமான காரணங்கள் வெளியாகின!
Local News விபத்துகள்

கெரண்டி எல்ல பேருந்து விபத்துக்கான சந்தேகத்திற்கிடமான காரணங்கள் வெளியாகின!

கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.அதன்பின்னர், விபத்துக்கான உறுதியான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என ஜாலிய பண்டார தெரிவித்தார்.

விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மேலும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பேருந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கு வழிவகுத்த பல அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய விசாரணைகளை சம்பந்தப்பட்ட குழு முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க எடுக்கவேண்டி நடவடிக்கைகள் குறித்த யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறுவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version