Radio Raaga Local News Politics சட்டம் குறித்த கணிப்பால் நீதிமன்றம் அவமதிப்பு
Local News Politics

சட்டம் குறித்த கணிப்பால் நீதிமன்றம் அவமதிப்பு

சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக புதிய மெகசின் சிறைச்சாலைக்கு இன்று (23) காலை சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வௌியிட்டார்.

நீதிக்கான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படும் நேரத்தில், சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை கணிக்க முடியாது என்று சஜித் பிரேமதாச இதன்போது வலியுறுத்தினார்.

இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என்று நாட்டு மக்கள் நம்ப வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.

சட்டத்தை அமுல்படுத்துவதும், அது குறித்து மக்கள் கொண்டுள்ள புரிதலும் மிகவும் முக்கியம் என்றும், சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிடுவதால் குறித்த செயல்பாட்டில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.

“நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவது வெளிப்படையானதாகவும், அரசியல் சாராததாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும், அது அதே முறையில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், மூன்றாம் தரப்பினர் வெளியே வந்து இதுதான் நடக்கிறது என்று கூறுவது உண்மையில் சட்டவிரோதமானது. அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நான் அவரைச் சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

Exit mobile version