Radio Raaga Local News நேற்று ஒரே நாளில் வாகன விபத்துக்களால் அறுவர் பலி
Local News விபத்துகள்

நேற்று ஒரே நாளில் வாகன விபத்துக்களால் அறுவர் பலி

நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஐந்து வாகன விபத்துகளில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

கலன்பிந்துனுவெவ, நால்ல, தொம்பே, பூகொட, கிளிநொச்சி மற்றும் இங்கிரிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன. கலன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவில் கெகிராவ-கலன்பிந்துனுவெவ வீதியில் யகல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் செலுத்துனரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் பலத்த காயமடைந்து யகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கலன்பிந்துனுவெவ மற்றும் அங்குருவத்தொட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 31 வயதான இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், நால்ல பொலிஸ் பிரிவில் கொழும்பு – குருநாகல் வீதியில் டொனல்வத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்கலன் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உடுகம பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார். இதேவேளை, தொம்பே பொலிஸ் பிரிவின் ஹங்வெல்ல – கிரிந்திவெல வீதியில் பானகல வெதமெதுர சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்துச் சென்று முன்னால் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மோட்டர் சைக்கிள் செலுத்துனர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் பூகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் A-09 வீதியில் பழைய கச்சேரி அருகில் வவுனியா திசை நோக்கிச் சென்ற கெப் வண்டி ஒன்று வீதியை கடந்த பாதசாரி மீது மோதியதில் படுகாயமடைந்த பாதசாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் 55 வயதான திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அதேநேரம் இங்கிரிய பொலிஸ் பிரிவின் பாணந்துறை – இரத்தினபுரி வீதியில், இங்கிரிய வைத்தியசாலைக்கு முன்னால் வீதியை கடந்த பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 82 வயதான வயோதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version