Radio Raaga Education பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தின் மூன்றுமாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா
Education Local News

பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தின் மூன்றுமாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா

பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்யாலயம் 1934 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். ஆரம்ப காலத்தில் இப் பாடசாலையில் தரம் 1 முதல் 11 ஆம் ஆண்டு வரையிலான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்ப காலங்களில் சைவப் பரிபாலன சங்கத்தினாலே இப் பாடசாலை நிர்வகிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் கீழ் இப்பாடசாலை நிர்வகிக்கப்பட்ட நிலையில் தரம் ஆறாம் ஆண்டுக்கு மேற்பட்ட வகுப்புகள் பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்திற்கு இடம் மாற்றப்பட்டன.

அன்று முதல் சரஸ்வதி கனிஷ்ட மஹா வித்தியாலயம் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான மாணவர்களை மட்டுமே கொண்ட பாடசாலையாகவே திகழ்கின்றது.

தற்பொழுது சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் அவர்களுக்கான இடப்பற்றாக்குறை தேவையான விளையாட்டு மைதானம் போன்ற பாடசாலை ஒன்றுக்கு தேவையான வசதிகள் இல்லாமல் தான் இயங்கி வருகின்றது.

20 வருட காலமாக இடப்பற்றாக்குறை காரணமாக தற்காலிகக் கூடாரங்களிலேயே சில வகுப்புகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

ஆரம்பப் பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு முக்கியமான தேவையான திறந்த வெளி கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சரியான இட வசதிகள் கூட அமைந்ததில்லை.

இந்த பாடசாலை அதன் கற்றல் நடவடிக்கைகளை பல சவால்களுக்கு மத்தியிலும் சிறப்பான முறையில் மேற்கொள்கின்றது.

கடந்த வருடத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் பதுளை மாவட்டத்தின் முதலாவது இடத்தினை பெற்ற பாடசாலை இந்த பாடசாலையே.

இவர்களது முக்கிய பிரச்சினை இடப்பற்றாக்குறையாகும் அதற்கான தீர்வாக இந்த அரசாங்கத்தின் ஊடாக மாகாண கல்வி அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தின் மூன்று மாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா பல சிறப்பு அதிதிகள் கலந்துக்கொண்டு சிறப்பான முறையில் நேற்றைய தினம் (21.07.2025) ஆரம்பிக்கப்பட்டது.

Exit mobile version