இன்று பண்டாரவளை, அக்.12 –நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை உச்ச மட்டத்தில் இருந்து முற்றாக ஒழிக்க அரசாங்கம் உறுதியுடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (12) பண்டாரவளையில் நடைபெற்ற மலையக சமூகத்தினருக்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என வலியுறுத்தினார்.
200 ஆண்டுகளாக நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தினருக்கு இன்றளவும் தங்களுக்கென காணி இல்லாத நிலை தொடர்கின்றது என்பதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழும் வகையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நாளாந்த சம்பளமாக ரூ.1,700 வழங்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இவ்வருடத்துக்குள் அந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மலையக மக்களே வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுகாதார ரீதியான பின்னடைவை அதிகமாக எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனைக் கவனத்தில் கொண்டு சிறந்த சுகாதார சேவைகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
நாட்டில் சுத்தமான குடிநீர் வழங்கும் புதிய திட்டம் ஒன்றுக்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வறுமைக்கும் கல்விக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை உணர்ந்துள்ளதாக கூறிய ஜனாதிபதி, மக்களை வறுமையிலிருந்து மீட்டு எடுப்பதற்கான சிறந்த கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றார்.
மலையக மக்களின் கௌரவம் அடிமட்டத்தில் இருப்பதை நன்கு அறிந்துள்ளதாகவும், அவர்களின் கலாச்சாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
