தாம் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை இன்று(26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தநிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் நோய் நிலைமை காரணமாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இதன்படி, நேற்று (25) அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற வேண்டும் என அறிவித்திருந்தனர். அது தொடர்பில் மருத்துவர்களினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அவரது உடல்நிலை சீராக இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டால், அவரை மன்றுக்கோ அல்லது வெளியிலோ அழைத்துச் செல்வது கடினம் என்று சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
