Radio Raaga Local News Crime and Threats வெளிநாட்டிலிருந்து வந்த தாயும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!
Crime and Threats Local News

வெளிநாட்டிலிருந்து வந்த தாயும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 3 பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மின்சார உபகரணங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குஷ் போதைப்பொருளுடன், 3 பெண்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் ​​வணிகர்களுக்கான சிவப்பு பாதை வழியாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நேற்று இரவு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கொலன்னாவ பகுதியை சேர்ந்த 46 வயது தாயும் அவரது 18 வயது மகளும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருட்கள் தாய்லாந்தில் பெற்று, மின்சார சமையல் சாதனங்களில் மறைத்து வைத்து, இந்தியாவின் சென்னைக்கு வந்து, பின்னர் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மூன்று பெண்களும் இதற்கு முன்பு பல முறை இந்த முறையில் மின் சாதனங்களைக் கொண்டு வந்திருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும், அவற்றைக் கொண்டு வந்த மூன்று பெண்களையும், மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version