Sports

2025 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு RCB தகுதி!!!

2025 முதலாவது தகுதிச் சுற்று போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள மஹாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பஞ்சாப் அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில் சுயாஷ் சர்மா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வரிசை, ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில், அணியின் முக்கிய வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால், பெங்களூர் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்திற்கு முன்னால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இதனால், பஞ்சாப் அணி 101 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதன்படி, 102 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 10 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பெங்களுர் அணி சார்பில் பில் சால்ட் அதிகபட்சமாக 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். இந்த வெற்றியை தொடர்ந்து, பெங்களூர் அணி ஜூன் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் ப்ளே ஆஃப் சுற்றில் பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றி இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version